பதிவு செய்த நாள்
27
பிப்
2012
10:02
செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேர்த் திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா, கடந்த 20ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி மயானக் கொள்ளையும், 24ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று நடந்தது. மயானக் கொள்ளையன்று பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த, தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக இருந்து தேர்த் திரு விழா எடுப்பதாக கோவிலின் தல புராணம் கூறுகிறது. தேரில் பவனி வரும் அங்காளம்மனை வணங்கும் போது, சகல தேவர்களையும் ஒரே இடத்தில் வணங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். இத்திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் அமைக்கின்றனர். இதன்படி, புதிதாக அமைத்திருந்த தேரில் நேற்று மாலை 4 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை ஏற்றி வடம் பிடித்தனர். இதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் வந்திருந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது நேர்த்திக்கடனைச் செலுத்த, பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள், தானியங்கள், நாணயங்களை தேரின் மீது வீசி எறிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதில், விழுப்புரம் கலெக்டர் சம்பத், கணேஷ்குமார் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.