செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு காமாட்சியம்மன் அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மனை ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அங்காளம்மனை சரண கோஷத்துடன் வழிபட்டனர்.
தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தை மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார், டி.ஆர்.ஓ., பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.