மயிலாடுதுறை,: வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இது நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகும். இக்கோவில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நிகராக போற்றப்படுகிறது. இங்கு செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.ஆண்டுதோறும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு செவ்வாய் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, தை செவ்வாய் உற்சவம், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான, 10ம் நாள் திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது.இதை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து செல்வ முத்துக்குமார சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.