ஆர்.கே.பேட்டை: வங்கனூர் வியாசேஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழி ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பக்தர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் கிராமத்தின் தென் கிழக்கில் அமைந்துள்ளது வியாசேஸ்வரர் மலைக்கோவில். மலைக்கோவிலுக்கு படிப்பாதை இதுவரை இல்லை.ஆல மரங்கள் சூழ்ந்த பாதை வழியே பக்தர்கள் நடந்து சென்று, பெருமானை தரிசித்து வருகின்றனர். இந்த நித்திய பூஜைகளுடன், பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா, ஐப்பசி பவுர்ணமி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.காணும் பொங்கல் திருநாளில் மலை சுற்று திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு படிப்பாதை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்களின் நீண்ட கால விருப்பம். இதன் பேரில், தற்போது, படிப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில், பணிகள் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.