தேவிபட்டினம்: ராமநாதபுரம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தோஷ பரிகார தலமான நவபாஷாண கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் நவபாஷாண கோயில் வெறிச்சோடியது.
ராமநாதபுரத்தில் இருந்து 13 கி.மீ.,ல் நவபாஷாண கோயில் உள்ளது. கடலுக்குள் 20 மீட்டர் தொலைவில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இங்கு கடல் உள்வாங்கும் நேரத்தில் சிலைகள் வெளியில் தெரியும். கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது நவக்கிரங்களின் சிலைகள் கடல் நீரில் மூழ்கும். இங்கு செல்ல கடலை ஒட்டி கான்கிரீட்டால் ஆன நடை பாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண கோயிலுக்கு தோஷங்கள் நிவர்த்தி செய்ய பரிகார பூஜை செய்ய பெரும்பான்மையான பக்தர்கள் வருகை தருவார்கள். முன்னோருக்கு திதி கொடுப்பவர்களும் இங்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.
தற்போது பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் நவபாஷாண கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் மிக பிசியாக இருக்கும் கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். பிப்., மாதத்தில் தை அமாவாசைக்கு பின் கூட்டமே இல்லை. பக்தர்கள் வந்தால் தான் வியாபாரம் நடக்கும். இனி கோடை விடுமுறையில்தான் பக்தர்கள் அதிகளவு வருவார்கள், என்றனர்.