நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர். இப்பகுதியில் பிரபலமான நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த பிப்.11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் கோயிலில் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து, சந்தன கருப்பு கோயில் வந்தனர். அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். முக்கிய நாட்களில் மயில், சிம்மம் மற்றும் அன்ன வாகனங்களில் அம்மன் நகர்வலம் செல்கிறார். வருகிற பிப்.26 அன்று விழாவின் முக்கிய நிகழ்வுகளான அக்னி சட்டி எடுத்தல், கழுமரம் ஏற்றம், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட வைபங்கள் நடக்க உள்ளன. மறுநாள் காலை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.