விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகே வீரபெருமாள் கோயில் உள்ளது. சன்னதி இடப்புறம் நாகம்மாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் நாகம்மாள் நாகதோஷம் உள்ளோர், திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தருகிறார். நாகம்மாள் சராசரி மனிதர். அவர் தெய்வம் ஆவதற்கு ஒரு முன்கதை யுள்ளது. நான்கு தலைமுறைக்கு முன் வீரபெருமாள் கோயில் "காட்டுக்கோயில் என அழைக்கப்பட்டது.
இங்கு நாகலிங்கம், நாகம்மாள் தம்பதியர் குழந்தை வரம் வேண்டி வீரபெருமாளிடம் வேண்டினர். சாமியின் வரத்தால் நாகம்மாள் பாம்புக் குழந்தையை பெற்றெடுத்தாள் என்றும், அக்குழந்தையை சிலர் ஏளனமாக பேசினர். இதனால் நாகலிங்கம் மனமுடைந்து இறந்தார். நாகம்மாள் நம்பிக்கையோடு பாம்புக்குழந்தையான நாகேஸ்வரியை வளர்த்தெடுத்தார். ஊர்மக்கள் நாகம்மாளுக்கும், நாகேஸ்வரிக்கும் அரிசியை தானம் செய்வர். நாகலிங்கத்தின் சகோதரர்கள் பாம்புக்குழந்தை நாகேஸ்வரியை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி குழந்தையை வெட்டி பாம்பு புற்றில் போட்டனர். நாகம்மாள் வெட்டிய தன் மகளை கையில் எடுத்து ஊர்மக்களிடம் நியாயம் கேட்டும், கிடைக்காததால் வரம் கொடுத்த வீரபெருமாளிடம் முறையிட்டாள். அப்போது பெருமாள் தன் இடப்பக்கம் அமர்ந்து கொள். உன்னை தேடி வருவோரின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்றார். தற்போது நாகம்மாள் இங்கு கையில் பாம்புக்குழந்தையுடன் அருள் பாலிக்கிறார். வெள்ளி தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.