பதிவு செய்த நாள்
16
பிப்
2019
01:02
பெரியகுளம்: பல ஆண்டுகளுக்கு முன் பெரியகுளத்தில் உள்ள "பெரியகுளம் தொடர் மழையால் நிரம்பி ஓரிரு நாளில் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயகட்டத்தை எட்டியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என ஊர்ப்பெரியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக "பெரியக்கா பீடத்தில் சாரல் மழையில் விளக்கேற்றி தீபமிட்டனர். என்ன
ஆச்சரியம். பெரியகுளம் குளம் நீர், குளத்திற்குள் கட்டுப்பட்டு அடங்கியது.
இன்றைக்கும் பெரியகுளத்தில் விவசாயிகள் அந்த பீடத்தை வணங்கி விட்டு பணியை துவங்குகின்றனர். அப்பீடத்தின் அருகே அரும்பாக வளர துவங்கிய ஆலமரத்தின் விதை, தற்போது 50 அடி உயரத்தில் வளர்ந்து, அதன் கிளைகள் வலது புறம் 30 அடி விரிந்து, குளத்து நீரினை தொட்டுக் கொண்டு உள்ளது. இடதுபுறம் 30 அடி விரிந்துள்ளது. பீடத்திற்கு குடை பிடித்தது போல் மரத்தின் கிளைகள் ஏராளமாக உள்ளன. சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளம் பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள், அப்பீடத்தை வணங்கி, ஆலமரத்தின் அழகை ரசிக்கின்றனர்.
இயற்கையை நேசிப்போம் குழுவினார்கள் கூறியதாவது: மாசி மகா சிவராத்திரியில் பெரியக்கா பீடத்திற்கு சிறப்பு பூஜை நடக்கும். திருமண வயதுடைய பெண்கள் பெரியக்காவை வணங்கி தீபம் இட்டால் விரைவில் திருமணம் நடப்பதோடு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெரியக்காவை "அக்காவாகவும், ஆலமரத்தை "தம்பியாகவும் இந்த ஊர்க்காரர்கள் நேசிக்கின்றனர். இங்கு 10 நிமிடம் கண்ணை மூடி நின்றால், ஜில்லென்று காற்று உடலை வருடும். குளத்து நீரின் சங்கீத சலசலப்பும், மரக்கிளைகளில் கூடு கட்டியுள்ள எண்ணறற பறவைகளின் ரீங்காரமும், மனதை ஒரு நிலைப்படுத்தி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
இது பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, என்றனர்.