பதிவு செய்த நாள்
18
பிப்
2019
12:02
சிவகங்கை : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் நாளை (பிப்.19) நடக்கும் மாசி தெப்ப உற்ஸவத்திற்கு பாதுகாப்பு பணியில் 1,030 போலீசார் ஈடுபடுகின்றனர். வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவ விழா பிப்.,9ல் துவங்கியது. பிப்.,10 முதல் தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது.
பத்தாம் நாளான நாளை (பிப்.19) காலை 6:10 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி திருவீதி உலா நடக்கும். காலை 11:10, இரவு 10:00 மணிக்கு தெப்ப உற்ஸவம் நடக்கும். ஸ்ரீதேவி பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் தெப்ப உற்ஸ வத்தில் எழுந்தருள்வர்.
தொழில், குடும்ப விருத்திக்காகவும், திருமண தடை நீங்கவும் பெண்கள் தெப்பத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக விளக்கு ஏற்றி வழிபடுவர். தெப்ப உற்ஸவத்தை காண சென்னை, கும்பகோணம், மயிலாடுதுறை, ஸ்ரீரங்கம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையில் 8 டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர்கள், 145 எஸ்.ஐ.,க்கள்., 496 போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த டி.எஸ்.பி., தலைமையில் 3 போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 49 எஸ்.ஐ.,க்கள், 295 போலீசார் என, 1,030 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகம் செய்கிறது.