பதிவு செய்த நாள்
18
பிப்
2019
04:02
சாயல்குடி : கன்னிராஜபுரத்தில் பத்திரகாளியம்மன், உஜ்ஜையினி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கன்னிராஜபுரத்தில் சித்தி விநாயகர், கன்னி விநாயகர்,உஜ்ஜையினி காளியம்மன், பத்திர காளியம்மன், மதுரை வீர சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி வேலைகள் முழுவீச்சில் நடந்தது.கடந்த பிப்., 15 வெள்ளிக்கிழமை முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கோ பூஜை, லட்சுமி பூஜை, திரவிய சமர்ப்பணம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. டி.எம்.கோட்டை சிவாச்சாரியார் வெங்கடேஷ் குழுவினர்கள், நேற்று (பிப்., 17ல்) காலை 11:00 மணியளவில் கோபுர விமான கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர் மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானமும், இரவில் 20 அடி உயரமுள்ள தேரில் மூலவர்களின் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. ஓய்வு பெற்ற சென்னை கூடுதல் எஸ்.பி., குழந்தைக்கனி தலைமை வகித்தார்.
தொழிலதிபர் டி.பால்பாண்டியன்,சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன், ஓய்வு ஆசிரியர் ராஜமுத்து, சென்னை வக்கீல் அஜித் டோகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ஜி.வி.பலவேசம் ரமேஷ், நிர்வாகஸ்தர்கள் பி.எஸ்.வேல்ச்சாமி, ராஜேந்திரன், பி.சுந்தரமகாலிங்கம், பேராசிரியர் குருசாமி, நாராயணன், கணக்குப்பிள்ளை அசோகன், கோயில் பூஜாரி மாரிமுத்து, முன்னாள் கிராம தலைவர் நவபன்னீர் செல்வம், உத்திரக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.