பெண் பக்தர் மொட்டை எடுத்தால் பழநியில் தரிசனத்திற்கு முன்னுரிமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2019 04:02
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் முடி காணிக்கை (மொட்டை) செலுத்தினால் அவருடன் சேர்த்து மூன்று நபர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது.
திருப்பதிக்கு அடுத்தப்படியாக பழநி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தினமும் நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதன்மூலம் கோயில் நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர்கோயில், வின்ச் ஸ்டேஷன், தண்டபாணி நிலையம் தங்கும் விடுதி, வடக்கு கிரிவீதி நவீன முடிக்காணிக்கை நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கின்றனர்.
இங்கு சேகரிக்கப்படும் முடி ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதில் ஆண்களின் முடியைவிட பெண்களின் கூந்தலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதன் காரணமாக பழநியில் பெண் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினால் அவருடன் சேர்த்து 3 பேருக்கு சாமிதரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண் கள் பூமுடி கொடுத்தால் கிடையாது. இது தொடர்பாக அனைத்து முடிக்காணிக்கை நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது, என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.