பதிவு செய்த நாள்
20
பிப்
2019
01:02
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில், நுாற்றுக்கணக்கான சுவாமிகளுக்கு மாசி மக தீர்த்தவாரி நடந்தது.கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில், நேற்று காலை 6:00 மணியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமிகள், மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
காலை 8:30 மணியளவில் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் சுவாமிக்குதீர்த்த வாரி நடந்தது.திருவந்திபுரம்தேவநாத சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சுவாமி, வரதராஜ பெருமாள், வண்டிப்பாளையம் அங்காரம்மன், சிவசுப்ரமணியர் சுவாமி, திருமாணிக்குழி வாமணபுரீஸ்வரர் உட்பட நுாற்றுக்கணக்கான சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. குளிர்பான பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்திருந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். சுவாமிகள் தீர்த்தவாரிக்கு சென்றதால், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று காலை முதல் மாலை வரை நடை சாத்தப்பட்டிருந்தது. மகத்தையொட்டி, தேவனாம்பட்டிணத்திற்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் அன்னதானம் வழங்கின. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.