பதிவு செய்த நாள்
20
பிப்
2019
01:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகத்திற்காக லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து, மணிமுக்தாற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன், கடந்த 8 ம் தேதி துவங்கியது. மாசி மகத்தையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, நேற்று முன்தினம் இரவே, மக்கள் குவியத் துவங்கினர்.
இதனால், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பஸ்கள் அனைத்தும் பொன்னேரி புறவழிச்சாலை, பூதாமூர் வழியாக பஸ் நிலையம் சென்றன. அதிகாலை, 3:00 மணியளவில் பொதுமக்கள் மணிமுக்தாற்றில் ஊற்று தோண்டி குளித்துவிட்டு, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து, மணிமுக்தாற்றில் ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபட்டனர். பிற்பகல் 3:00 மணிக்கு மணிமுக்தாற்றில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3:00 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை சண்டிகேஸ்வரர் வீதியுலா நடக்கிறது.
பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத திருவிழா: விருத்தாசலத்தில் தேரோட்டம், மகம் ஆகிய இரு தினங்களிலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிவர். உணவு பண்டங்கள் விற்பனையால் நகரின் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குவியும். அவற்றை அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்கள் திணறுவர். தற்போது, தமிழக அரசு ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகளுக்கு தடை விதித்திருப்பதாலும், அன்னதான நிகழ்ச்சிகளை போலீசார் முறைப்படுத்தியதாலும், பிளாஸ்டிக் குப்பைகள் குறைவாகவே காணப்பட்டன. இதனால், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க கோவில் சன்னதி, பிரகாரங்கள் மற்றும் கோபுரங்களில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலின் வெளிப்பிரகாரம், தேரடி, தேரோடும் வீதிகள் என 8 இடங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர்.