பதிவு செய்த நாள்
22
பிப்
2019
12:02
காஞ்சிபுரம்: குமரகோட்டம் கோவிலில், மாசி மக உற்சவத்தில், மறு அலங்காரம் செய்து, சுவாமி புறப்பட்டதில், ஆகம விதி மீறல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளிய குமரகோட்டமும் ஒன்று. இக்கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு உற்சவர் புறப்பாடு நடைபெற்றது.
நகரில் உள்ள ராஜ வீதிகளை சுற்றி வந்து, சுவாமி அருள்பாலித்தார். சுவாமி புறப்பாடுக்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், கோவிலுக்குள்ளேயே வெள்ளித்தேர் இழுத்தனர். அ.தி.மு.க.,வினர் வெள்ளித்தேர் இழுத்த பின், தேரில் வீற்றிருந்த சுவாமியை இறக்கி, அலங்காரம் கலைத்து, மீண்டும் மாசி மகம் உற்சவத்திற்கான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின், சுவாமி வீதியுலா சென்று அருள்பாலித்தார். ஒரே நாளில், இருமுறை அலங்காரம் செய்தது, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது, ஆகம விதிமீறல் எனவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘இருமுறை சுவாமி புறப்பாடு என்பது ஆகம விதிமீறல் அல்ல. கோவிலுக்குள் வெளியே இருமுறை செல்ல கூடாது. செவ்வாய்கிழமை என்பதால், வழக்கம் போல வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது’ என்றனர்.