பதிவு செய்த நாள்
26
பிப்
2019
12:02
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்ட, ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலை இன்று துாத்துக்குடி பயணமாகிறது. திருமுருகன்பூண்டியில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிற்ப தொழிற்கூடங்கள் உள்ளன. இவற்றில், வடிவமைக்கப்படும், சிலைகள், நம் நாடு மட்டுமன்றி, இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் என பல்வேறு நாடு களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருமுருகன் பழனிவேல் சிற்பக்கலை கூடத்தில், ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலை, ஆறு மாதமாக உருவாக்கப்பட்டு வந்தது. தற்போது, சிலை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, துாத்துக்குடி, கலெக்டர் அலுவலக பின் வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இது குறித்து, ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது: கோவிலில், தனி சன்னதியில் மூலவராக இந்த சிலை வைக்கப்பட உள்ளது. நான்கு டன் எடை கொண்ட இந்த சிலை, ஒன்பது அடி உயரம் கொண்டது. ஸ்ரீ சனீஸ்வர பகவானின், வாகனமான காகம் மூன்று அடி உயரம் உள்ளது. வலது கைகளில், சூலம், அபயம் மற்றும் இடது கையில் வரதம், வில்அம்பு இடம் பெற்றுள்ளது. தோஷங்களை நீக்கும் சாந்தமான தோற்றத்துடன், பகவான் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் புண்ணியமாக கருதுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.ஒன்பது அடி உயரம் கொண்ட ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிலையை, பக்தர்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.