நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2019 11:02
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று 10 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கடந்த பிப்.11 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
மறுநாள் காலை கரந்தமலை கன்னிமார் கோயிலில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம் கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தினந்தோறும் மஞ்சள்நீர், பால்குடம், மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பிப்.15 ல் மயில், பிப்.19 ல் சிம்மம், பிப்.22 ல் அன்ன வாகனங்களில் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் சென்றார். பிப்.24 ல் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மறுநாள் காலை அம்மனுக்கு மஞ்சள் பாவாடை எடுத்து வருதல், மாலையில் அரண்மனை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் அம்மன் குளத்தில் இருந்து அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பகலில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து காப்பு கட்டிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர். இரவு அம்மன் குளத்தில் கம்பம் சேர்க்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் அம்மன நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.