உலகின் மிகப் பெரிய பகவத்கீதை புத்தகம்: பிரதமர் மோடி வெளியிட்டார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2019 02:02
டெல்லி: உலகிலேயே மிகப் பெரிய பகவத்கீதை புத்தகத்கதின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள இஸ்கான் கோயிலில் நேற்று (26.2.19) நடைபெற்றது. சுமார் 800 கிலோ எடையுள்ள பிரமிக்க வைக்கும் இந்த பகவத்கீதை புத்தகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். விழாவிற்கு ஸ்ரீலபிரபுபாதாவின் சீடரும், இஸ்கான் மூத்த சந்நியாசியுமான கோபால் கிருஷ்ண கோஸ்வாமி முன்னிலை வகித்தார்.
பிறகு பிரதமர் பகவத்கீதைக்கு மஹா ஆரத்தி காண்பித்து, புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார். தொடர்ந்து பிரதமர் சிறப்புரை ஆற்றினார். இதில் அவர், “பகவத்கீதை ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் அறிவுறுத்துகிறது. உலகமே இன்று யோகா, ஆயுர்வேதம் என்று பழம்பெரும் ஞானத்தை நோக்கி வருகிறது. இந்த எல்லா ஞானங்களும் பகவத்கீதையில் உள்ளது. பகவத்கீதையை உலகுக்கு வழங்கியதில் இஸ்கானின் பங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்கானை நிறுவிய சுவாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் பகவத்கீதைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். இந்த பிரம்மிக்கதக்க பகவத்கீதை புத்தகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறினார். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தி வேதாந்த குருகுல மாணவர்கள் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்து வரவேற்பு அளித்தனர்.