பதிவு செய்த நாள்
04
மார்
2019
05:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்தபோது, அடி, முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த நாள், சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே, பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த, லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல் மதியம், 12:00 மணி வரை அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. மகா சிவராத்திரி அன்று உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்க கொடிமரம் அருகே மக்காசோளம், அன்னாசிப்பழம் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் முன் உலக நன்மைக்காக 108 கலைஞர்களுடன் நாதஸ்வரம், தவில் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.