பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் பூக்குண்டம் திருவிழா நடக்கும். இந்தஆண்டு திருவிழா கடந்த பிப்., 26ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் இரவு, 7:00 மணிக்கு கோவிலை சுற்றி தீபவழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு, 12:00 மணியளவில் பெரியநாயக்கன்பாளையத்தில் மயான பூஜையும், களிமண்ணினால் மிகப்பெரிய உருவம் செய்து, சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. சனிக்கிழமை நகை கொண்டு வருதல் மற்றும் பூக்குண்ட திறப்பும் நடந்தன.முக்கிய நிகழ்ச்சியான பூக்குண்டம் மிதித்தல் வைபவம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலிலிருந்து நேற்று காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட அக்கினிக் கரகங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன.முதலில் கோவில் பூசாரி தீக் குண்டத்தில் பூப்பந்து உருட்டிவிட்டு இறங்கினார். பின்னர், அக்கினி கரகங்கள் மற்றும், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.