திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2019 11:03
திருப்புவனம்:திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 8ம் நாளான நேற்று (மார்ச்., 19ல்) திருக்கல்யாணம் நடந்தது.
திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்பவனேஷ்வரரும் -சவுந்தரநாயகி அம்மனும் திருக் கல்யாண கோலத்தில் எழுந்தருளினர். அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பகல் 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. அதன்பின் அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.
திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். விழாவில் சுப்ரமணிய பட்டர் வகையறாவினர், செந்தில்பட்டர், அசோக்பட்டர், கண்ணன் பட்டர், ராஜா பட்டர் ஆகியோர் மந்திரங்கள் முழங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.
ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மார்ச் 20ம் தேதி காலை 9:20 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.