பதிவு செய்த நாள்
21
மார்
2019
11:03
மயிலாப்பூர்: பங்குனிப் பெருவிழாவின் கடைசி நாளான நேற்று, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக அரங்கேறியது. உற்வசர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, கொடியேற்றத்துடன், 11ம் தேதி துவங்கியது.விழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை, திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில், உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண வைபவம், நேற்று இரவு துவங்கியது. இருவரும், சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். திருமண சம்பிரதாய சடங்குகள் முடித்த பின், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மணக்கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து, கைலாய ஊர்த்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன், பங்குனி விழா நிறைவு பெற்றது.இன்று, பந்தம் பறி விழா நடக்கிறது. நாளை, விடையாற்றி துவங்குகிறது.