பதிவு செய்த நாள்
22
மார்
2019
10:03
சபரிமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு, பம்பையில் ஆராட்டு வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவில் கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு அடைந்தது.
கேரளாவில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, கடந்த, 12-ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறந்ததும், சுவாமி, கோவிலுக்குள் எழுந்தருளலும், அபிஷேகம், நெய்யபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு உஷபூஜைக்கு பின், சுவாமி விக்ரக பவனி பம்பைக்கு யானை மீது புறப்பட்டது. பகல், 12:00 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடந்தது. ஆராட்டு குளத்தில் உற்சவமூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்ட பின், தந்திரி கண்டரரு ராஜீவரருவும், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியும், ஆராட்டு குளத்தில் அய்யப்பனின் விக்ரகத்துடன் மூழ்கி எழுந்தனர். பின், கணபதி கோவில் முன், சுவாமி விக்ரகம் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு சன்னிதானம் வந்ததும், திருக்கொடி இறக்கப்பட்டு, திருவிழா முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, கோவில் நடை அடைக்கப்பட்டது.