பதிவு செய்த நாள்
22
மார்
2019
11:03
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, திருப்பதியில் இருந்து வேங்கடாஜலபதி பெருமாள் சிலை கொண்டு வரப்பட்டு, தான்யவாசம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி - திண்டினம் சாலை பஞ்சவடீயில் பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தற்போது கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலமாக, ராமர் சந்நிதிக்கு எதிரில், மேற்கு நோக்கி புதியதாக, வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒத்துழைப்புடன், திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் சிலையை போன்று, அதே உயரத்தில் புதியதாக வெங்கடாஜலபதி பெருமாள் சிலை செய்யப்பட்டு, நேற்று மாலை பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதனையொட்டி, மேள தாளங்கள் முழங்க, கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன், சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விநாயகர் சந்நிதி எதிரில் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் வெங்கடாஜலபதி பெருமாள் சிலை தான்யவாசம் செய்யப்பட்டது.
பிரதிஷ்டை செய்யப்பட உள்ள பெருமாளை பக்தர்கள் சரிதனம் செய்து அனுக்கிரகம் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.சில வாரங்களுக்கு பின், தண்ணீர் நிரப்பப்பட்டு, சுவாமிக்கு ஜலாதிவாசம் செய்யப்பட உள்ளது. அதன்பின், புதியதாக கட்டப்பட்டு வரும் சந்நிதியில், வெங்கடாஜலபதி பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். வரும் ஜூன் 23ம் தேதி, வெங்கடாஜலபதி சந்நிதி, வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு சொர்ணபந்தன மகா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டியினர் செய்து வருகின்றனர்.சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, திருமஞ்சனம் என அனைத்து சேவைகளும், திருமலையில் நடைபெறுவதை போல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தெரிவித்துள்ளது.