மதுரை: செங்கோட்டை அருகே ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி ஐயப்பன், புஷ்கலா தேவிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. பங்குனி உத்திரம் ஐயப்பனின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. ஐயனோடு ஐக்கியமாக வேண்டி தவமிருந்தவர் புஷ்கலா தேவி. அவரின் பக்திக்கு இரங்கி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் புஷ்கலா தேவியுடன் மணக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் ஐயப்பன்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயில் நாடக சாலை மண்டபத்தில் நேற்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது. தீர்த்த கலசங்களுக்கு நடுவில், பஸ்மம் நிறைந்த பிரம்ம கலசத்திற்கு மலர்களால் அர்ச்சனை நடந்தது. கோகுலத்து மடம் தந்திரி வாசு தேவரு தலைமையில் அர்ச்சகர்கள் பூஜையை நடத்தினர். மாலை லட்சார்ச்சனை முடிந்து பிரம்ம கலசத்தையும், தீர்த்த கலசங்களையும், புஷ்பாபிஷேகத்திற்கான மலர் கூடைகளையும் ஏந்தி கோயிலை வலம் வந்து அபிஷேகத்திற்கு கொண்டு சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் ஆலோசனை கமிட்டி தலைவர் சுரஷே், செயலர் சரசன், அனி, ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க நிர்வாகிகள் கே.ஆர்.ராகவன், எஸ்.ஜே. ராஜன், ஹரிஹரன், கண்ணன், சுரஷே் கண்ணன் செய்தனர்.