திருப்புல்லாணி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2019 12:03
திருப்புல்லாணி: திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி கோவிந்தா கோஷம் முழங்க நேற்று தேரோட்டம் நடந்தது.
திருப்புல்லாணியில் பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது. ஆலய பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. மார்ச் 13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களும் உற்ஸவ மூர்த்திகளுக்கு கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை, கோஷ்டிப்பாராயணம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை 10 மணிக்கு கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தேரோட்டம் நடந்தது. 46 அடி உயர பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.
ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவமூர்த்தியாக தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடினர். நிறைவாக தீர்த்தம் தெளிக்கப்பட்டு, பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை 9:00 மணிக்கு ஆதிஜெகநாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் உற்ஸவ மூர்த்திகளாய் கருட, ஆஞ்சநேய வாகனத்தில் எழுந்தருளி சேதுக்கரைக்கு சென்று தீர்த்தவாரி பூஜையில் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.