பதிவு செய்த நாள்
22
மார்
2019
02:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம், நேற்று (மார்ச்., 20ல்), விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா, 11ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில், ஏழாம் நாள் தேர் திருவிழா, விமரிசையாக நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாணம், நேற்று (மார்ச்., 20ல்) அதிகாலை, 5:30 மணிக்கு, ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்பாளுக்கு நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி திருக்கல்யான நிகழ்ச்சியை கண்டு, தரிசனம் செய்தனர்.இதை தொடர்ந்து, ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்திலும் அம்பாள், தனி வாகனத்திலும், நான்கு ராஜவீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சக்கரத்திற்கு ரப்பர் பொருத்தம்: கடந்த காலங்களில், இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. மேடு, பள்ளங்களில் வாகனம் ஏறி இறங்கும்போது ஏற்பட்ட அதிர்வுகளால், பழைய உற்சவர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீகாஞ்சி அனைத்து திருக்கோவில்கள் நலச்சங்கத்தினர், சுவாமி வீதியுலா செல்லும் வாகனத்தை, 2.60 லட்சம் ரூபாய் செலவில், பிரத்யேகமான முறையில் புதுப்பித்தனர். வாகனத்தில் இருந்த இரும்பு சக்கரங்களை அகற்றி, ரேடியல் டயர், ஹைட்ராலிக் பிரேக், ஷாக் அப்சர்பர் பொருத்தப்பட்டுள்ளது.இந்த வாகனம், இந்து அறநிலையத் துறை இணை ஆணையர், தனபாலிடம் நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) ஒப்படைக்கப்பட்டது.