பதிவு செய்த நாள்
26
மார்
2019
11:03
உடுமலை : உடுமலை, பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நிறைவாக, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.உடுமலை, சங்கிலி வீதி பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. திருவிழாவின் துவக்கமாக கருப்பண்ணசாமி பூஜை நடந்தது.கடந்த 18ம் தேதி, திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, புண்ணியார்ச்சனை நடந்தது. தொடர்ந்து, 19ம் தேதி காப்புகட்டுதல், முளைப்பாலிகை எடுத்தல் மற்றும் கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவையொட்டி, நாள்தோறும், மாலையில் கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த 23ம்தேதி, தேவராட்டத்துடன், பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபட்டனர். நேற்றுமுன்தினம், மாவிளக்கு பொங்கல் விழா இடம் பெற்றன. திருவிழாவின் நிறைவாக, நேற்று, காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது.இன்று, கும்பம் விடுதல் மற்றும் முளைப்பாலிகை விடுதல், நாளை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.