பதிவு செய்த நாள்
26
மார்
2019
12:03
ப.வேலூர்: நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ப.வேலூர் அருகே, நன்செய் இடையாற்றில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா, கடந்த, 10ல் தொடங்கியது.
கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் தீர்த்தங்கள் ஊற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.
தினமும் இரவு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக சென்று அருள்பாலித்தார். கடந்த, 17ல் மறுகாப்பு கட்டப்பட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 24ல்) வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 25ல்), தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கூறப்படும், 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தும், பெண்கள் பூவாரி போட்டும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.