பதிவு செய்த நாள்
26
மார்
2019
03:03
உலக வாழ்விற்கு மிகவும் இன்றிமையாதது பொருள். அதை உழைப்பினால் திரட்டும் உரிமையை ஆண்களைப் போல், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. “உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின்னர் தன் வீட்டாருக்கும் செலவு செய்யட்டும்,” என்ற நபிமொழியிலுள்ள ‘வீட்டார்’ என்னும் சொல், மனைவி மக்களைக் குறிக்கும். எனவே, ஒவ்வொரு கணவனும் தனக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை அடைய முயல்வது போல், தன் மனைவி மக்களையும் அவற்றை அடையச் செய்ய வேண்டும்.ஒருவேளை, மனைவிக்கும் மக்களுக்கும் செலவழிக்கத் தயங்கிக் கஞ்சத்தனம் செய்யும் கணவனின் பொருளிலிருந்து, தனக்கும் தன் மக்களுக்கும் போதிய நியாயமான அளவு பொருளை எடுத்துக்கொள்ளும் உரிமை கூட மனைவிக்கு வழங்கப்பட்டு உள்ளது.நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார், அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இதுபற்றி ஒரு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.‘‘அபூசுப்யான் அவர்களின் மனைவியும், <உத்பாவின் மகளாருமான ஹிந்தா என்பவர், நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் துõதரே! நிச்சயமாக, என் கணவர் அபூசுப்யான் கஞ்சத்தனமுள்ள மனிதராக இருக்கிறார். அவருக்குத்
தெரியாத நிலையில், நான் அவரின் பணத்தில் இருந்து எடுப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் எனக்கும் குழந்தைகளுக்கும் போதுமாகக் கொடுப்பதில்லை,” என்று முறையிட்டார்.அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைகளுக்கும்போதுமான பணத்தை நியாயமான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்,” என்றார்கள்.
இதன்மூலம், ஒரு கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய செலவுகளைத் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. வீட்டுச்செலவுக்கு இனியாவது போதுமான அளவு பணம் கொடுங்கள்.