பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
12:04
சென்னை: காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் அதிகார நந்தி சேவை அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் - அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொண்டை மண்டலத்தில் உள்ள பிரதான சிவாலயங்களில் ஒன்றாக, சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. 450 ஆண்டுகள் பழமை யான இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், மூன்றாம் நாளான இன்று (12ம் தேதி) அதிகார நந்தி சேவை அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் - அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்திரை விழாவின் முக்கிய நாளான, 16ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 17ம் தேதி புஷ்ப விமானத்தில், 63 நாயன்மார்களுக்கு, இறைவன் திருக்காட்சி நடக்கிறது. 18ம் தேதி பிச்சாடனார் கோலத்தில், திருவீதி உலா நடக்கிறது.வரும், 19ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 20ம் தேதி புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கிறது. அன்று இரவு, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 21ம் தேதி, உற்சவ சாந்தி, நவ கலச அபிஷேகம் நடக்கிறது.