பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
02:04
மோகனூர்: மோகனூர் கடைவீதியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 8ல் கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, பல்வேறு சிறப்பு அபி ஷேகம், ஆராதனை நடந்தது.
தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்தில் ஊற்றி வழிபடுகின்றனர். காலை, இரவு, அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. வரும், 21 இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கின்றனர். மறுநாள் காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மதியம், 3:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி ஊர்வலமாக வரும், ஆண், பெண் பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, சுவாமிக்கு, நேர்த்திக்கடன்
செலுத்துகின்றனர். ஏப்., 23 காலை, 6:00 மணிக்கு, பொங்கல், கிடாவெட்டு பூஜை, 24 காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.