பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
10:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.
மதுரை சித்திரை திருவிழாவில், நேற்று காலை, 8:00 மணிக்கு, தங்கச்சப்பரத்தில் கங்காளநாதர் உலா வந்தார். மதியம், 12:00 மணிக்கு கோவிலின் மீனாட்சி நாயக்கர் மண்டகபடிக்கு, அம்மன் வந்தார். இரவு, 7:00 மணிக்கு நந்திகேஸ்வரர், யாளி வாகனங்களில் சுவாமியுடன் எழுந்தருளிய அம்மன், நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தார். தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இன்று இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் சமர்ப்பிக்கப்படும். நாளை மீனாட்சி அம்மன் திக் விஜயம், நாளை மறுநாள் காலை, 9:50 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம், 18ல் தேரோட்டம் நடக்கிறது.