திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருவனந்தாள் பூர்வாங்க பூஜை நடந்து விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 8:30 மணிக்கு சிவபெருமானின் அம்ஸமான அஸ்திரத்தேவரும், விநாயகரின் அம்ஸமான அங்குஸத்தேவரும் கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி கோயில் திருக்குளத்தின் தெற்கு படித்துறையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து உலக நன்மையை வேண்டும் ஜபத்தை தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள், சோமசுந்தரகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்தனர். தொடர்ந்து புனித தீர்த்தங்கள் அடங்கிய திருக்குளத்தில் ஸ்ரீதர் குருக்கள் தீர்த்தவாரி நடத்தினார். மகா மண்டபத்தில் மூஷக வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு மூலவர் சன்னதி முன் விகாரி தமிழ் ஆண்டிற்கான பஞ்சாங்கத்தில் பொதுப்பலன்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்தரசேகரரும் கவுரி அம்மன் பிரகார வலம் வந்தனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் அமராவதி புதுார் ராம.அண்ணாமலை, தேவகோட்டை. எம்.நாகப்பன் செய்தனர்.