பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
02:04
விழுப்புரம்: மதுரை வீரன் கோவிலில் நடந்த சித்திரை பெருவிழாவில், ஏராளமானோர் பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள, மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவிலில், 12ம் ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று நடந்தது. அதிகாலையில் கோ பூஜை, கங்கை நீர் மற்றும் 108 மூலிகைகளை கொண்டு மகா கணபதி ஹோமம் நடந்தது. சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, மதுரை வீரனின் குதிரை வாகனம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழா ஏற்பாடுகளை, சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் சுந்தரேசன், ஊராட்சி முன்னாள் தலைவர் ராயர், ஜெயராமன், கிருஷ்ணன், முனியன் உள்ளிட்ட விழாக்குழுவினரும், வாசுதேவன், பெரியார் உள்ளிட்ட ஊர் பிரமுகர்களும், வழுதரெட்டி, சாலாமேடு ஊர் மக்களும் செய்திருந்தனர்.