பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
02:04
திருக்கோவிலூர்; தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் திரிவிக்கிரமன் விஸ்வரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, 9:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் கண்ணாடி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னதியில் கருட சேவையில் தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அம்பாள் சன்னதியில் சிவானந்த வல்லி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு, வசந்தோற்சவத்தை முன்னிட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.
கிழக்கு வீதி, ஆஞ்சநேயர் கோவிலில், காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம், முத்தங்கி அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு, அர்ச்சனை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சங்கராபுரம் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு, சங்கராபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சங்கராபுரம் கடைவீதி அரசமரத்தடி வினாயகர் கோவிலில், சித்திரை மாத பிறப்பையொட்டி, நேற்று காலை பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனை நடந்தது. அதையடுத்து, சுவாமிக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல, சங்கராபுரம் சிவன் கோவில், பூட்டை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடந்தது. காட்டுவனஞ்சூர் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.