ராமேஸ்வரம்:ராம நவமி விழா யொட்டி ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஸ்ரீ ராமரின் திருவுருவ படத்துடன் ஊர்வலம் வந்தனர்.
ஏப்.,14ல் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை ராம நவமி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. நேற்று (ஏப்., 14ல்) ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. பின் திருச்சி ராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் சுவாமி சுத்தானந்தா தலைமையில் ராமரின் திருவுருவ படத்துடன் பள்ளி மாணவ, மாணவிகள் கோயில் ரதவீதியில் ஊர்வலம் வந்தனர்.
பின் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு பள்ளி தாளாளர் சுவாமி நியமானந்தா தலைமை வகித்தார். விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி, விபீஷணரின் சரணாகதி எனும் நாடகம் நடந்தது. விழாவில் பள்ளி முதல்வர் சுரேஷ், பள்ளி குழு நிர்வாகிகள் சுடலை, கம்பன் கழகம் பொருளாளர் ராமு, ஆசிரியர்கள், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.