பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
திருத்தணி,:தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் நேற்று (ஏப்., 14ல்) நடந்தது. பக்தர்கள், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 13ல்) இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று (ஏப்., 14ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று (ஏப்., 13ல்) காலை, 9:00 மணிக்கு, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் துவங்கி, மலை கோவிலில் உள்ள, காவடி மண்டபத்தில் நிறைவடைந்தது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், அரக்கோணம் எம்.பி., அரி, ஆகியோர் பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், கேடய வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். மாடவீதியில் ஆறாக ஓடிய அபிஷேக பால்உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில், 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. பால் வெளியேற தனி குழாய் உள்ளது. குழாய் உடைந்திருந்ததால், பால், கோவில் மாட வீதியில் வெளியேறி ஆறாக ஓடியது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் என்பதால், பக்தர்கள் அதை மிதிக்காமல் செல்ல, சிரமப்பட்டனர்.