பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
04:04
கோபி: கோபி, மேட்டுவலவு வள்ளியம்மன் கோவில் திருவிழா, கோலாகலமாக நேற்று (ஏப்., 14ல்) நடந்தது. கடந்த, 13ல், பவானியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
அதையடுத்து, மேட்டுவலவு, வீராசாமி வீதி, சுப்பண்ணன் வீதி, பாரியூர் ரோடு, வள்ளியம்மன் கோவில் வீதீயை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தனர். மஞ்சள் புடவை உடுத்திய சிறுமி ஒருவர், கையில் வேப்பிலையுடன், கன்னிசாமியாக வள்ளியம்மன், வீதியெங்கும் ஊர்வலம் வந்தார். அப்போது அருள் வந்த பெண்கள், பக்தி பரவசத்துடன் அருள்வாக்கு கூறினர். ஊர்வலம் வந்த கன்னிசாமிக்கு, பெண் பக்தர்கள், புனித நீர் ஊற்றி, கற்பூரம் ஏற்றி பக்தியுடன் வனங்கினர். 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதனால், மேட்டுவலவு மற்றும் பாரியூர்ரோடு முழுக்க நேற்று (ஏப்., 14ல்) விழாக்கோலம் பூண்டிருந்தது.