ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று, நகர வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தேர் திருவிழா நடந்தது. முன்னதாக அதிகாலை பூவராகசுவாமி, அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 5.40 மணிக்கு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவியோடு திருத்தேர் வலம் வந்த பின்னர் தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி நகரில் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. நாளை மதியம் மட்டையடி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.