பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் நடப்பட்டதை யொட்டி, பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற துவங்கினர்.உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களின், காவல் தெய்வமாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது.
இதையொட்டி, பக்தர்கள், நோன்பு சாட்டப்பட்டதும் விரதத்தை துவங்கினர்.திருவிழாவின் முக்கிய அம்சமான, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் (ஏப்., 16ல்) இரவு நடந்தது.
பக்தர்களின் பரவச கோஷத்துடன், கோவிலில் கம்பம் நடப்பட்டு, மஞ்சள் நீர் ஊற்றப் பட்டது.அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திருவிழாவின் போது பல்வேறு வேண்டுதல்களை மனதில் நினைத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். கம்பம் நடுதலைத்தொடர்ந்து, பக்தர்கள் நேற்று முதல், வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இன்று (ஏப்., 18ல்), இரவு, 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி மற்றும் கிராம சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கிறது.கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி, நாளை (ஏப்., 19 ல்) பகல் 12:30 மணிக்கும், மதியம் 2:00 மணிக்கு பூவோடும் ஆரம்பமாகிறது.
பூவோடு வேண்டுதல், 23ம்தேதி இரவு, 10:00 மணியுடன் நிறைவுபெறுகிறது. வரும் 24ம்தேதி அம்பாள் திருக்கல்யாணமும், 25ம்தேதி மாலையில் திருத்தேரோட்டமும் நடக்கிறது. நாளை (ஏப்., 19ல்) முதல், தினமும், மாலை, 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. திருத்தேர் தயார்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது. விழாவில், இன்று (ஏப்., 18ல்), மாலை, 6:00 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. குட்டைத்திடலில், 20ம் தேதி முதல், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.