பதிவு செய்த நாள்
21
ஏப்
2019
12:04
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் , தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். மதுரை ராமராயர் மண்டபத்தில் நேற்றிரவு கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் காலை கள்ளர் திருக்கோலத்தில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். விழாவின் நேற்று காலை 6 மணிக்கு வண்டியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஏகாந்த சேவை நடந்தது. பின், அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர், வைகையாற்றில் தேனுார் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி மண்டூகருக்கு மோட்சம் தந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், அனுமார் கோயிலுக்கு வந்தார். அங்கு, அங்கப்பிரதட்சணம் நடந்தது. நேற்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு கள்ளழகர் வந்தார். அங்கு தசாவதார நிகழ்ச்சிகள் துவங்கின. முதலாவதாக முத்தங்கி சேவை அலங்காரத்தில் கள்ளழகர் அருள்பாலித்தார். பின், ஒவ்வொரு அவதார நிகழ்ச்சியாக விடிய, விடிய தசாவதார காட்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இவரது திருவடியைத் தரிசிப்போருக்கு பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.