பதிவு செய்த நாள்
21
ஏப்
2019
01:04
ஈரோடு: கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், திரளான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கோணவாய்க்கால் அருகில், கொண்டத்து சமயபுரம் மாரியம்மன், அங்காளம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டு குண்டம் விழா, கடந்த, 12ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. அக்னி கபால பூஜையை தொடர்ந்து, நேற்று முன்தினம் பகலில், குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு தீ மிதிக்கும் நிகழ்ச்சியை, தலைமை பூசாரி இறங்கி தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம் மன், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இன்று காலை, மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.