பதிவு செய்த நாள்
21
ஏப்
2019
01:04
பல்லடம்: பல்லடம் அருகே நடைபெற்ற ஸ்ரீமுத்துக்குமார சுவாமி திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.பல்லடம் அடுத்த சின்ன வடுகபாளையத்தில், ஸ்ரீவிநாயகர், மாகாளியம்மன், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. கோவில் ஆண்டு விழா, சித்ரா பவுர்ணமி விழா, மற்றும் வள்ளிநாயகி, தெய்வநாயகி சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட, முப்பெரும் விழா நடந்தது.
விநாயகர் கோவிலில் இருந்து, திருக்கல்யாண வைபவத்துக்கு தேவையான, பட்டு வேஷ்டி, புடவை, வளையல், ஆபரணங்கள், பழம், பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட அனைத்து சீர்வரிசைகளும் கொண்டு வரப்பட்டன.முன்னதாக, திருவிளக்கு வழிபாடு, வேள்வி வழிபாட்டுடன் விழா துவங்கியது. கந்தன் கருணை எனும் தலைப்பில், அனந்தகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆசியுரை வழங்கி, திருக்கல்யாண வைபவத்தை நடத்தினார்.விநாயகர், நவகிரகம், விஷ்ணு, மற்றும் கலச பூஜையுடன், மாலை மாற்றுதல், திருமாங்கல்யம் அணிவித்தல் நிகழ்வுகள் நடந்தன. பக்தர்கள் அனைவரும், பக்தி பரவசத்துடன், திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர்.சிறப்பு அலங்காரத்தில், வள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீமுத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, ஸ்ரீமாகாளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.