பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
12:04
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக வைகை ஆற்றுக்குள் அமர்ந்து அனைத்து மதத்தினரும் நிலாச் சோறு சாப்பிட்டனர். வைகை கரையோரம் நடக்கும் சித்திரை திருவிழாக்களில் மானாமதுரை தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நிலாச்சோறு சாப்பிடுவர். நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்றுக்குள் பவுர்ணமி நிலவு ஒளியில் மானாமதுரை, சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் வீட்டில் சமைத்த உணவு வகைகளை கொண்டு வந்து உறவினர்களோடு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மணிவண்ணன் 40, கூறுகையில், ‘‘ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்காக மானாமதுரை அருகே உள்ள எனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு வருவேன். அதற்கு மறுநாள் ஆற்றுக்குள் சென்று உறவினர்களோடு சேர்ந்து சாப்பிடும் போது மனது குதுாகலிக்கும். இதற்காக வருடந்தோறும் மானாமதுரைக்கு குடும்பத்தோடு வந்து விடுவோம். அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி,’’ என்றார்.