பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
பெ.நா.பாளையம்: துடியலூரை அடுத்த வடமதுரையில், 1,300 ஆண்டு பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணி நிறைவடைந்து, ஆக., மாதம் கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது.துடியலூரை அடுத்த வடமதுரையிலுள்ளது
விருந்தீஸ்வரர் கோவில். 1,300 ஆண்டு பழமையானது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவினாசி, அவினாசிலிங்கேஸ்வரரையும், கருணாம்பிகையையும்
வழிபட்டார்.பின், பசியோடு இக்கோவிலுக்கு வந்த போது, வேடனாக சிவனும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருந்து படைத்ததால், இக்கோவில் விருந்தீஸ்வரர் என,
அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் பெருமாள், ஆஞ்சநேயர், விநாயகர், சூரியபகவான், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், முருகன், துர்க்கை, நவகிரகங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, இக்கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, 18 ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. போதிய நிதி இல்லாமல்,
திருப்பணி நிறைவடையாமல் இருந்தது. தற்போது, கட்டுமான பணிமுற்றுப்பெறும் நிலையிலுள்ளது.
கோவில் திருப்பணிக்குழு தலைவர் மணி கூறுகையில்,சிவன் சன்னிதிக்கு மேலே, கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இதே போல கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன்,
சண்டிகேஸ்வரர், பைரவர், பெருமாள் சன்னிதிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் எழுப் பப்பட்டுள்ளன. கோபுரங்களின் மேல் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இவை தவிர, கோவில் வளாகத்தில் மீதமுள்ள திருப்பணியை முடிக்க, தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன. கும்பாபிஷேகம் வரும் ஆக., மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது நிறைவடைந்த உடன் கோவில் முன் பகுதியில் ராஜகோபுரக் கட்டுமானப் பணி துவக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.