பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா தேரோட்டம் நடந்தது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த 27ம் தேதி மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் ஏகசிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் திருவீத எழுந்தருளல், அபிஷேக, தீபாராதனை, மாலையின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு மண்டகப்படிதாரர் தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலையில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளினர். பின்னர் சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட திருக்தேருக்கு எழுந்தருளினர். காலை 9 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேளதாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் 9.40 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. இதன் பின்னர் 10.10 மணிக்கு அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் 10.50 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. சிறப்பு தீபாராதனை நடந்தது.
தேரின் ஒரு பகுதி வடத்தினை திரளான ஆண்களும், மற்றொரு பகுதி வடத்தினை திரளான பெண்களும் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரி கணபதி முருகன், ரோட்டரி சங்க தலைவர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் முருகன்ராஜ், கவுன்சிலர்கள் சாமி, ராதாகிருஷ்ணம்மாள், பிச்சாண்டி செட்டியார் சைக்கிள் டீலர் பழனி செட்டியார், ரங்கசாமி, பாலகிருஷ்ணன், அன்னையா பாண்டியன், சதீஷ், கிருஷ்ணமூர்த்தி, கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.பாண்டியராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி, டிராபிக் இன்ஸ்பெக்டர் சாம் வேதமாணிக்கம் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் செய்திருந்தனர். மதியம் அபிஷேக, தீபாராதனை நடந்தது. மாலையில் ஆன்மிக சொற்பெழிவு, இரவு வணிக வைசியர் சமுதாய மண்டகப்படிதாரர் தீபாராதனை, கனக பல்லக்கில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல் நடந்தது. விழாவின் பத்தாம் நாளான இன்று (7ம் தேதி) காலையில் தீர்த்தவாரி, தட்சிணாமூர்த்தி பூஜை, அபிஷேக, தீபாராதனை, அன்னதானம் வழங்கல், மாலையில் புஷ்பாஞ்சலி, நாதஸ்வர கச்சேரி, மகாலட்சுமி பூஜை, இரவு வயலின் கச்சேரி, மெல்லிசை நிகழ்ச்சி, சிறப்பு பல்சுவை கலை நிகழ்ச்சி, நாடார் சமுதாய மண்டகப்படிதாரர் தீபாராதனை, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி எழுந்தருளல், அதிநவீன கம்ப்யூட்டர் வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.