பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடக்கிறது. குண்டம் இறங்குவதற்காக நேற்று முன்தினம் இரவே குண்டம் இறங்கும் பக்தர்கள், கோவிலின் முன் காத்திருந்தனர். ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் இயங்கி வருகிறது. இக்காளியம்மன் மிகவும் சக்தியுள்ளதாக கருதப்படுவதால், ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பூ மிதிப்பது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா, ஃபிப்ரவரி 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ல் கொடியேற்றம், தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டு, இன்று அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்கேற்ப குண்டத்துக்கு தேவையான மரக்கட்டைகளை காணிக்கையாக வழங்கினர். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நேற்று நடந்தது. கோவிலில் இன்று குண்டம் இறங்கும் பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு முதலே, கோவில் முன் உள்ள பந்தலில் வரிசையில் அமர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ""இந்த ஆண்டு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு ஒரு நாள் முன்பே, குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர். குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பக்தர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர். நாளை (இன்று) நடக்கும் குண்டம் விழாவில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, பலரும் நீர்மோர், கூழ் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர், என்றனர்.