பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
03:04
காஞ்சிபுரம்: தேன்பாக்கம் அருகே உள்ள, இரட்டை விநாயகர் கோவிலில், நேற்று (ஏப்., 22ல்) காலை, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
அச்சிறுபாக்கம் அடுத்த, 21 தேன்பாக்கம், மதுரா அண்ணாநகர் பகுதியில், இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகளுக்கான வேலைகள் அனைத்தும், சமீபத்தில் முடிந்தன.இதையடுத்து, நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) மாலை, கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று (ஏப்., 22ல்) அதிகாலை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, மூலவர் சன்னிதி விமானத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, கிராம தேவதையான மாரியம்மன் சன்னிதி விமானத்திற்கு, கலச நீர் ஊற்றப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, மூலவர் இரட்டை விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் கோவில் குழுவினர் செய்தனர். இன்று முதல், மண்டல பூஜை துவங்குகிறது.