பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான "வெள்ளி தேரோட்டம் இன்று (7ம் தேதி) துவங்குகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடக்கின்றன. கடந்த மாதம் 21ம் தேதி "திருக்கம்பம் நடுதலும், 28ம் தேதி இரவு கோவில் "பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, 2ம் தேதி முதல் நேற்று (6ம் தேதி) வரை தினமும் இரவு பக்தர்கள் விரதமிருந்து "பூவோடு எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (7ம் தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று அதிகாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்படும். காலை 5.00 மணி முதல் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.00 மணிக்கு அம்மன் திருகல்யாண உற்சவம் நடக்கிறது. தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசையாக தங்கத்தில் கிரீடம், ஆபரணங்கள், வேல் ஆகியவை வழங்கப்படும். பகல் 12.00 மணிக்கு அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு சின்னாம்பாளையத்திலிருந்து பூசணிக்காய், சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டு, இரவு தேர் வடம் பிடிக்கும் போது தேர் சக்கரத்தின் கீழ் வைக்கப்படும். தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வரப்படும். இரவு 7.00 மணிக்கு வெள்ளி தேரில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில், 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகர் எழுந்தருளுகிறார். இத்தேர் முதல் வடம் பிடிக்கப்படும். பின்னர், 21 அடி உயரமுள்ள வெள்ளி தேர் வடம் பிடிக்கப்படும். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் தேர்திருவிழாவில், முதல்நாளான இன்று கோவிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் தேர்நிலை நிறுத்தப்படும். நாளை (8ம் தேதி) இரவு தேரோட்டம் மீண்டும் துவங்கி உடுமலை ரோடு வழியாக அன்று இரவு சத்திரம் வீதியில் தேர் நிலை நிறுத்தப்படும். மறுநாள் (9ம் தேதி) இரவு சத்திரம் வீதியில் இருந்து துவங்கும் தேரோட்டம் மார்க்கெட் ரோடு வழியாக கோவில் வளாகத்தில் உள்ள தேர்நிலையை அடைகிறது. தேரோட்டம் நிறைவடைந்ததும் அன்று இரவு பரிவேட்டையும், தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தொழிலதிபர் மகாலிங்கம், கோவில் செயல்அலுவலர் நாகையா ஆகியோர் செய்கின்றனர்.