பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
11:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலில், தமிழ் மொழியை அகற்றி, ஹிந்தி மொழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில், தமிழில் உள்ள கல்வெட்டுகளுக்கு பதிலாக, ஹிந்தியில் கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை, கோவிலை பராமரிக்கும் தொல்லியல் துறை மறுத்துள்ளது.
இது குறித்து, தஞ்சாவூர் பெரிய கோவிலின், இந்திய தொல்லியல் துறை, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டப்பட்ட விதம், அப்போதைய ஆட்சி முறை குறித்த தகவல்கள், கோவில் முழுவதும் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், அக்கால தமிழ் மொழியில் உள்ளன. மராட்டியர் காலத்தில், கோவிலின் முகப்பு பகுதியில், மராட்டா நுழைவு வாயில் மற்றும் கோவிலின் உள்ளே பல்வேறு கட்டுமானங்களை செய்தனர். இதற்கு சான்றாக, கோவிலின் தென்மேற்கு பகுதியில் திருச்சுற்று மாளிகையின் சுவரில், மராத்தி மொழியின் தேவநாகரி என்ற எழுத்துகளை கொண்டு, திருப்பணிகள் தொடர்பான கல்வெட்டுகளை, பொறித்து வைத்துள்ளனர்.மராத்தியம், ஹிந்தி, தேவநாகரி எல்லாம் வரி வடிவ அமைப்பில், பார்ப்பதற்கு ஒரே வடிவமாகத் தோன்றும். ஆனால், இரண்டும் வெவ்வேறு.
இவை இந்தி எழுத்துகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.நேற்று தமிழக நுண்ணறிவுப் பிரிவு, உளவுப்பிரிவு போலீசார் கோவிலுக்கு வந்து, அங்குள்ள கல்வெட்டுகளை படமாக பதிவு செய்து சென்றனர்.நடவடிக்கை வேண்டும்கோவிலுக்கு நாள்தோறும், ஏராளமான சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். இவர்கள் அலைபேசி மூலமாக, கோவில் வளாகத்தில் பல இடங்களையும் படம் பிடிக்கின்றனர். இந்த படங்களை பலருக்கும் அனுப்பி, உண்மைக்கு புறம்பான தகவலை பரவ விடுவதால், கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கோவிலுக்குள் அலைபேசிக்கு தடை விதிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எத்தனை கல்வெட்டுபெரிய கோவிலில், ராஜ ராஜனால், 64 கல்வெட்டுகள், ராஜேந்திர சோழனால், 21 கல்வெட்டுகள், 2ம் ராஜேந்திர சோழனின் ஒரு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டு, மூன்றாம் ராஜேந்திரனின் ஒரு கல்வெட்டு, பாண்டியரின் இரு கல்வெட்டுகள், விஜயநகர நாயக்கர் காலத்தை சேர்ந்த, நான்கு கல்வெட்டுகள், மராத்திய காலத்தில், நான்கு கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.